Thursday 21 February 2013

சிறுகதை ஓடிப்போனவன்
டாக்டர் ஜி. ஜான்சன்

நள்ளிரவைத் தாண்டி ஒரு மணி இருக்கலாம். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை தேவகி எழுப்பினாள்.
கண்விழித்தேன். அணைந்திருந்த மின்சார விளக்கு மீண்டும் உயிர் பெற்றிருந்தது . கூசிய கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து அவளைப் பார்த்தேன்.
" என்ன தேவகி? பேஷண்ட்டா? "
" ஆமாம் டாக்டர்...ஒரு எமெர்ஜென்சி. முதுகில் பெரிய கட்டு. தையல் போடணும் போல இருக்கு.. போலீஸ் கேசா என்று தெரியல. தமிழ பையன்கள்தான். " வெளியில் சத்தம் கேட்காதவாறு மெல்லியக் குரலில் கூறினாள் .
முகம் கழுவி துடைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.
மூன்று தமிழ் இளைஞர்கள் நுழைந்தனர்.
கட்டு போட்டுள்ள இளைஞனைக் கைத்தாங்கலாக மற்ற இருவரும் அணைத்து வந்தனர்.
நேராக சிகிச்சை அறைக்குள் கொண்டுபோகச் சொல்லிவிட்டு பின்தொடர்ந்தேன்.
தேவகி கட்டுகளை அவிழ்த்துக்கொண்டிருந்தாள் . நான் கைகளில் உறைகள் மாட்டிக்கொண்டு அவர்களை விசாரித்தேன்.
" என்ன ஆச்சு? உண்மையைச் சொல்லுங்கள்." அவர்களைப் பார்த்துக் கூறினேன்
" டாக்டர், எங்கள் மேல் எந்த தப்பும் இல்லை. நாங்கள் டீ கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். யாரோ இரண்டு பேர் பைக்கில் வந்து இறங்கி இவனை பாராங்கத்தியால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். சாலா ஓராங் போலே தெரியுது.. "
" போலீசில் ரிப்போர்ட் செய்தீர்களா? "
" இல்லைங்க டாக்டர். அங்கே போனா பெரிய பேஜார். நாங்கள் எந்த அடையாளமும் காட்டமுடியாது. எங்களையும் பிடிச்சி உள்ளே வச்சுடுவான். " இருவரில் ஒருவன் விளக்கினான்.
" இவனை எப்படியாவது காப்பாத்த வேண்டும். அதனால்தான் உங்களிடம் வந்துருக்கோம் . பணம் பத்தி கவலை வேண்டாம். " இது அடுத்தவனின் மன்றாட்டு .
இந்த அகால நேரத்தில் என் இவர்கள் டீ கடைக்குப் போகணும்? வீட்டில் யாரும் இது பற்றி கேட்பதில்லையா? உள்ளுக்குள் இதுபோன்ற கோபம் இருந்தாலும் வெட்டுப்பட்டு கிடப்பவன் மீது அனுதாபமே உண்டானது.
காயத்தைப் பார்த்தேன். முதுகின் பாதியில் நேர்கீழாக நீண்ட வெட்டு அது. சுமார் இருபது சென்ட்டிமீட்டர் நீளம். மூன்று சென்டிமீட்டர் ஆழம் எனலாம். இருபதுக்கும் குறையாத தையல் தேவைப்படும்.. இதில் தோலைமட்டும் ஒன்றுசேர்த்து தைத்துவிட முடியாது. உள்ளே வெட்டுபட்டுள்ள இரத்தக் குழாய்களை கட்டியாக வேண்டும். அப்போதுதான் அவற்றிலிருந்து பீச்சிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் இரத்தம் நிற்கும். அதன்பிறகு பிளவுபட்டுள்ள தசைகளை ஒன்றாக இணைத்துத் தைக்க வேண்டும். இதற்கு கேட்கட் எனும் பிரத்தியேக நூலால்தான் தைக்க வேண்டும். அது விலை உயர்ந்த ரகம்.. இறுதியில்தான் சில்க் நூல் பயன்படுத்தி தோலை மூட வேண்டும்.
மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தபோது எப்படியும் 450 வெள்ளி அவர்கள் கட்டவேண்டி வரும். தேநீர் அருந்த வந்த அவர்களிடம் அவ்வளவு பணம் இருப்பதில் அர்த்தமில்லை.முறைப்படி இதுபோன்ற வன்முறையில் காயம் உண்டானவர்களை நாங்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதே வழக்கம். காரணம் இதில் ஏதேனும் காவல்துறையினரின் வழக்கு விசாரணை இருக்க நேர்ந்தால் நாங்கள் சாட்சி கூற நீதிமன்றம் செல்லவேண்டி வரும். கிளினிக் வேலையை விட்டுவிட்டு இவ்வாறு நாங்கள் அலைந்துகொண்டிருக்க முடியாது. இது தனியார் கிளினிக்.
ஆனால் இவர்கள் சொல்வது உண்மையெனில் நேராக அரசு மருத்துவமனைக்கே சென்றிருக்கலாம். அங்கு அனைத்துமே இலவசம். அங்கு போகாமல் இங்கு வந்துள்ளதில் எதோ மர்மம் மறைந்துள்ளது என்பதையும் நான் அறிவேன். அங்கு சென்றால் நிச்சயமாக அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அனுப்புவார்கள். அதை சமாளிக்க இவர்களுக்கு பயம் உள்ளது.
தமிழ் இளைஞர்கள் என்பதால் உதவலாம் என்ற முடிவுடன், " இதை என்னால் சரி செய்ய முடியும் ஆனான் உங்களுக்கு நிறைய செலவாகும். மொத்தம் 450 வெள்ளி கட்டவேண்டும். முடியுமா உங்களால்? " என்றவாறு அவர்களில் முகங்களை நோட்டமிட்டேன். எல்லார் முகத்திலும் ஏமாற்றமே பிரதிபலித்தது.
" பேசாமல் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகலாமே? அங்கெ எல்லாமே இலவசமாச்சே? " அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிய அவ்வாறு கேட்டேன். அங்கு நின்றிருந்த தேவகிகூட அதை ஆமோதிப்பதுபோல கண்ஜாடைக் காட்டினாள் .
தேவை இல்லாமல் நான் நான் உதவப்போவது குறித்து அவளுக்கு விருப்பம் இல்லை., இதை செய்து முடிக்க எப்படியும் ஒரு மணி நேரமாகும். அவள்தான் எனக்கு உதவியாக வேண்டும்.
அவர்கள் கண்கள் மூலமாகவே எதோ பேசிக்கொள்வது தெரிந்தது.
" டாக்டர் பணத்த பத்தி யோசிக்காதீங்க. நான் உளுதிராம் போய் பணம் கொண்டாறேன். " என்று கூறிய ஒருவன் விருட்டென்று வெளியேறினான்'.
" டேய் ...நானும் வரேண்டா ! " அவன்பின்னே இன்னொருவனும் வெளியே ஓடினான்.
உள்ளே நின்றுகொண்டிருந்த மற்றொருவனை நான்தான் வெளியே காத்திருக்குமாறு கூறினேன்.
சிதைந்துபோயிருந்த சதையைச் சீர்செய்யும் பணியில் நானும் தேவகியும் இறங்கினோம். ஹைட்ரோஜென் பெராக்ஸ்சைட் ஊற்றி காயத்தை கழுவுவியபின்பு லோக்கல் அனஸ்தீசியா உதவியுடன் தையல் போடுவதில் கவனம் செலுத்தினேன்.
நான் ஒவ்வொரு தையலை முடிச்சு போட்டதும் தேவகி சில்க் நூலை வெட்டிவிடுவாள் .



தமிழ் இளைஞர்தானே? பணம் வாங்குவதில் இவ்வளவு கண்டிப்பாக உள்ளீரே என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரியாமல் இல்லை.. என்ன செய்வது? இது என் சொந்த கிளினிக் இல்லை. இதன் உரிமையாளன் ஒரு சீனன். பண விஷயத்தில் மிகவும் கறார்ப் பேர்வழி. இரவு நேரத்தில் இரண்டு மடங்காக வாங்கவேண்டும் என்பது உத்தரவு. அவனுக்குத் தெரியாமல் தேவகியும் நானும் பணம் வாங்கினால் அது அவனை ஏமாற்றுவதற்கு சமம். அத்தகைய நேர்மையற்றச் செயல்களில் நான் என்றுமே ஈடுபட்டதில்லை..
நான் எண்ணியபடியே தையல்கள் போட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. அப்போது மணி 2.30..குனிந்துகொண்டு அவ்வளவு நேரமும் தையல் போட்டதால் இடுப்பு வலித்தது. தேவகி கட்டுகள் போட்டுக்கொண்டிருந்தாள் . நான் மருந்துகள் எழுதி முடித்துவிட்டு வெளியே வந்தேன். அங்கு யாரையும் ( அவனது நண்பனை ) காணவில்லை. கிளினிக்கின் வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் நின்றது.
எதிர்வரிசை மூலையில் இருந்த ஸ்ரீ முருகன் உணவகம் சென்று தேநீர் அருந்த கிளம்பினேன். அங்கு வீதியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவனின் நண்பன் உட்கார்ந்திருந்தான்.
" என்னங்க டாக்டர்? முடிந்ததா? " என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.
" ஆமாம். டீ குடிக்க வந்தேன்.. தனியாக உள்ளேயே பணம் கொண்டுவரப்போன உன் நண்பன் இன்னும் வரலையா? " வியப்புடன் கேட்டேன் .
" அதாங்க டாக்டர் காத்திருக்கேன். வந்து கொண்டிருக்கான்....நான் போய் அவனைப் பாக்கிறேன். நீங்க டீ குடிச்சுட்டு வாங்க டாக்டர். " இவ்வாறு கூறிவிட்டு கிளினிக் நோக்கி விரைந்தான்.
தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கிளினிக் நோக்கி சென்றபோது அங்கு அந்த மோட்டார் சைக்கிள் இல்லை.
என்னைக் கண்ட தேவகி ஓடிவந்து பதறினாள்.
" டாக்டர்! நான் மருந்து எடுத்துக்கொண்டிருந்தேன். வெளியில் மோட்டார் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். அந்த இருவரும் ஒன்றும் சொல்லாமல் ஓடிப்போய்விட்டார்கள்! பணம் கட்டவில்லை டாக்டர்! "
( முடிந்தது )
டாக்டர் ஜி.ஜான்சன்
நள்ளிரவைத் தாண்டிய நேரம் அது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அது பெர்மாஸ் ஜெயாவில் இயங்கிய 24 மணி கிளினிக். அதில் இரவில் தற்காலிகமாக கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தேன். இரவு 10 முதல் காலை 7 வரை அங்கு வரும் நோயாளிகளைப் பார்க்கவேண்டும். பெரும்பாலும் அதிகம்போனால் 10 பேர்களைப் பார்ப்பதே அபூர்வம் எனலாம். இதற்கு எதற்காக இப்படி இரவில் திறக்கவேண்டும் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. இது பல தொழிற்சாலைகளுக்கு வாடிக்கையான ( panel ) கிளினிக். அதனால் அங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இங்குதான் வருவர். எனது வேலை வரும் நோயாளிகளைக் கவனித்து அனுப்புவது. எனக்கு துணையாக உமா காலைவரை இருப்பாள்.
பதிவு செய்வது, கட்டு போடுவது, மருந்து கொடுப்பது, பணம் வசூலிப்பது, கணக்குகள் பார்ப்பது அனைத்தும் அவளின் வேலைதான்.
பெரும்பாலும் நள்ளிரவுவரை நோயாளிகள் வருவதுண்டு. அதன்பின் நாங்கள் முன்கதவை அடைத்துவிட்டு படுத்து விடுவோம். அவள் முன் அறையிலும் நான் பின் அறையிலும்தான் படுப்பது வழக்கம். நோயாளி வர நேர்ந்தால் அழைப்பு மணியை தட்டுவார்கள். நாங்கள் விழித்துக்கொள்வோம். நான் தூக்கம் வரும்வரை படிப்பதிலும் எழுதுவதிலும் இரவைக் கழிப்பேன். அவள் படுத்தும் நன்றாக தூங்கிவிடுவாள். சில இரவுகளில் நான்தான் அவளை எழுப்பிவிட நேரும். இவ்வாறு இரவைக் கழித்துவிட்டு காலையில் கையில் 200 வெள்ளியுடன் வீடு திரும்பி அவசர அவசரமாக வழக்கமான பகல் வேலைக்கு கிளம்பிவிடுவேன்!

வெளியில் இரைச்சல் கேட்டு விழித்தேன். அழைப்பு மணியும் மீண்டும் மீண்டும் ஒலித்தது. உமாவும் விழித்துக்கொண்டாள்.
" டாக்டர்! வெளியில் தமிழ்ப் பையன்கள். சண்டைபோல தெரியுது. பயமா உள்ளது! " உமா மெல்லியக் குரலில் தகவல் தந்தாள்.
அவள் பயந்துபோனதற்குக் காரணம் இருந்தது. இந்த அகால நேரத்தில் இப்படி கோஷ்டியாக வரும் தமிழ் இளைஞர்கள் பெரும்பாலும் குடி போதையில் வருவதோடு, பணம் கட்டும்போது தகராறும் செய்துள்ளனர். அவர்கள் பேசுவதும் கொச்சையாக இருக்கும்.கேட்ட வார்த்தைகள் சரளமாகவும் புரளும். இத்தகைய கசப்பான அனுபவங்கள்தான் அவளை பீதிக்குள்ளாக்கியது.
இந்த நேரத்தில் சண்டையா என நீங்கள் எண்ணலாம். அதற்கும் காரணம் உள்ளது. இங்கு புகழ்பெற்ற ஓர் இரவு கேளிக்கை விடுதி ( pub ) உள்ளது. தமிழரால் நடத்தப்படும் இந்த விடுதியில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் கூடுவதுண்டு. அவ்வப்போது சலசலப்புகளும் நிகழ்வது வழக்கம்.
" சரி...பதிவு செய்... என்னவென்று பார்ப்போம் . " நான் அவர்களைச் சந்திக்க தயாரானேன்.
அங்கே பெரும் இரைச்சல்!
": ஐ. சீ . எல்லாம் அப்புறம் தரோம்...மொதல்லே உள்ள விடுங்க..ரொம்ப சீரியஸ் ..."
எனக்குப் புரிந்து விட்டது. இது அந்த ரகம்தான். எப்படியாவது இவர்களை சமாளித்துவிடவேண்டுமன்று உமாவிடம் சைகை காட்டினேன்.
நான்கு தமிழ் இளைஞர்கள் ஒருவனைக் கைத்தாங்கலாகக் கூட்டிவந்தனர். அவனின் சட்டை இரத்தத்தால் நனைந்திருந்தத்து. இரத்த வாடையுடன் பீர் வாடையும் சேர்ந்து எனக்கு குமட்டலை உண்டுபண்ணியது. தரையில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் படுக்கையில் அவனைக் கிடத்தினோம்.
" டாக்டர்...சீக்கிரம் ஏதாவது செய்யுங்கள்.." இது ஒருவனின் குரல்.
" கழுத்துல வெட்டு டாக்டர்.!" இது இன்னொருவன் விளக்கம்.
" தையல் போடணும்! " மற்றொருவனின் ஆணை இது.
நான் கைகளில் உறைகள் மாட்டியபடி அவனின் கழுத்தைப் பரிசோதனை செய்தேன். ஆழமான வெட்டு அது. சதையைத் தாண்டி முக்கிய இரத்தக்குழாயும் துண்டிக்கப்பட்டிருந்தது.
கட்டப்பட்டிருந்த பழைய துணியை அவிழ்த்தபோது இரத்தம் பீரிட்டு அடித்தது. அதை கைகளால் அழுத்தி பஞ்சு துணி வைத்து இறுக கட்டினேன். ஆழமான அரிவாள் வெட்டு அது. கழுத்து சதை வெட்டுப்பட்டு தொங்கியது!
" என்ன ஆயிற்று? சண்டையா? போலீசில் ரிப்போர்ட் செய்தாச்ச? " அவர்களைப் பார்த்து கேட்டேன்.
" அதெல்லாம் ஒண்ணுமில்லை. கண்ணாடி ஜன்னலில் விழுந்துட்டான். அது கிழித்திடுச்சு . " ஒருவன் பொய் சொன்னான்.
" தையல் போடலையா டாக்டர்? " ஒருவன் கத்தினான்.
" காயம் ரொம்ப ஆழமாக உள்ளது .இரத்தக்குழாய் வெட்டு பட்டுள்ளது. அதை முதலில் கட்டினால்தான் இரத்தம் வெளியேறுவது நிற்கும்.அதை இங்கு செய்ய முடியாது. இதற்கு மயக்கம் தர வேண்டும்.அது இங்கு இல்லை . " என்று ஓரளவு விளக்கினேன்.
" இப்போ என்னதான் சொல்கிறீர்கள்? " இன்னொருவன் கத்தினான்.
" ஜெனரல் ஆஸ்பத்திரிதான் போகணும். வேறு வழியில்லை." உண்மையைத்தான் கூறினேன்.
" இது தெரியாமலா இங்கே வந்தோம்? அங்கே போனால் போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்றுதானே இங்கே வந்துள்ளோம்? இங்கே தையல் போடா முடியாது என்றால் எப்படி? " கோபமாகவே ஒருவன் கேட்டான்.
" இது சன்னலில் விழுந்த மாதிரி இல்லை . எங்களிடம் இப்படியெல்லாம் பொய் சொல்லக் கூடாது.இது மாதிரி அடிபுடி கேஸ் எல்லாம் நாங்கள் இங்கு பார்ப்பதில்லை . நீங்கள் தமிழ்ப் பையன்களாக இருப்பதால் உதவ நினைத்தேன். ஆனால் நான் என்ன செய்வது? இதை என்னால் இங்கு செய்ய முடியாதே? " மேலும் விளக்கினேன்.
" அப்போ நீங்க என்ன டாக்டர்? எங்கே மெடிக்கல் படிச்சீங்க? எதற்கு கிளினிக் தெறந்து வச்சிருக்கீங்க? " ஆவேசமாக கத்திக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தான்.
நான் அவனின் கையைப் பிடித்து ," தயவுசெய்து எல்லாரும் வெளியே போங்க. ஒருவர் மட்டும் உள்ளே இருந்தால் போதும். " இவ்வாறு கூறியவண்ணம் அவனை வெளியே கொண்டு போனேன். மற்றவரும் பின்தொடர்ந்தனர்.
கொஞ்சம் நிதானமாக இருந்தவன் மட்டும் அறைக்குள் இருந்தான்.
" இங்கே வசதி இருந்தால் நான் உதவ தயார்தான். அனால் வேறு வழி இல்லை. கால தாமதம் செய்தால் அதிக இரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்தாகலாம். உங்களின் நண்பன் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை நான் அறிவேன். நண்பனைக் காப்பாற்ற வேண்டுமானால் உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே நல்லது. " அவன் பொறுமையுடன் கேட்டுவிட்டு வெளியேறினான்.
நான் A T T ஊசிபோட தயார் செய்தேன்.
வெளியே சென்றவன் மீண்டும் நண்பர்களுடன் உள்ளே வந்தான்.
" சரிங்க டாக்டர்...நீங்கள் சொன்னபடியே செய்கிறோம் . கொஞ்சம் ஓவரா சாப்பிட்டுவிட்டோம். நிதானம் இல்லாமே பேசிட்டோம். மன்னிச்சிகிங்க. " இந்த திடீர் மாற்றம் எப்படி நடந்தது என்பது புரியவில்லை.
கையில் ஊசியுடன் வெட்டு பட்டவனிடம் சென்றேன்
படுத்திருந்தவன் விருட்டென எழுந்துகொண்டான்
" ஊசியா டாக்டர்? ஐயோ வலிக்குமே ! " என்றவாறு இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டினான்.
" தம்பி. சின்ன ஊசிதான் இது . வலிக்காது ." என்றவாறு நெருங்கினேன்.
அவன் எழுந்து ஓட முயன்றான்!
இரு நண்பர்கள் அவனை இறுக பிடித்துக்கொள்ள ஊசியைப் போட்டுவிட்டேன் வெற்றிகரமாக!
கையில் பிடித்திருந்த அந்த சின்ன ஊசியை அவர்களிடம் காட்டியபடி கூறினேன்.
" நீங்கள் அரிவாள் தூக்கி சண்டைக்கு போகிறீர்கள். ஆனால் இந்த ஊசியிடம் அந்த அரிவாள் தோற்றது பார்த்தீரா? அப்போ யார் பெரிய கேங்ஸ்டர்? நான்தானே? "
பெரிய வீரர்கள்போல் வந்தவர்கள் பெட்டிப்பாம்பாக வெளியேறினர்!
கற்பனைக் கால் வலி

டாக்டர். ஜி. ஜான்சன்
அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு
சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் டாக்டர் நித்தியானந்தா தலைநகரில்
நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு சென்றிருந்தார்.
எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து
நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த
சிறு டவுனின் மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள்
இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள
தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் நித்தியானந்தா டாக்காவில் மருத்துவம்
பயின்றவர். அதனால் அவர் ஹிந்தியும் உருது மொழியும் சரளமாக பேசுவார்.
இதனால் பல தொழிற்ச்சாலைகளுக்கு இவர் பகுதி நேர டாக்டராகவும் செயல்
பட்டார்.
கிளினிக் கச்சிதமாக வடிவமைக்கப்படிருன்தது .. அதில் பணிபுரிந்த
மூவரும் தமிழ்ப் பெண்கள்
எனக்கு உதவியவள் கமலா. மா நிறத்தில் ஒடிசலான உருவமுடையவள்.
தமிழ், ஆங்கிலம், மலாய் மொழிகளில் சரளமாக பேசுபவள். பம்பரமாக சுழன்று
பல்வேறு வகைகளில் எனக்கு உதவினாள்.
நோயாளிகளைப் பதியும் பகுதியில் லதா அமர்ந்திருந்தாள். அவள்
நல்ல நிறத்தில் மொழுமொழுவென்று பேசும் பொம்மையை நினைவூட்டினாள்.
நோயாளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். மாலையில்தான் சற்று
ஓய்வாக இருந்தது.
அப்போது கமலா என்னை சிகிச்சை அறைக்கு அழைத்தாள். அங்கே ஒரு
விசித்திரம் காத்துள்ளதாகவும் கூறினாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.
சக்கர வண்டியில் ஒரு மலாய் மூதாட்டி அமர்ந்திருந்தார். பாஜு
கூரோங் எனும் மலாய் உடை அணிந்திருந்தார்.
" அம்மா, உங்களுக்கு என்ன செய்கிறது? " என்று மலாய் மொழியில் கேட்டேன்.
என்னை ஏறெடுத்துப் பார்த்த அவர், " கடுமையான கால் வலி டாக்டர் " என்றார்.
" எந்த காலில் எத்தனை நாளா வலிக்குது ? " என்று கேட்டேன்.
" இதே காலில் ஆறு மாதமா வலிக்குது டாக்டர் . " என்று
சொல்லியவாறே கால்களை மறைத்திருந்த ஆடையைத் தூக்கினார்.
அவருக்கு ஒரு கால்தான் இருந்தது. இடது காலைக் காணவில்லை.அது
முழங்காலுக்குமேல் துண்டிக்கப்பட்டு தொங்கியது.
" உங்களுக்கு இனிப்பு நீர் வியாதியா? "
" ஆமாம் டாக்டர். காலை எடுத்து ஒரு வருஷமாவுது. ஆனா இன்னும்
வலிக்குது." என்று சொன்னவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
" அதான் கால் இல்லையே? பின்பு எங்கே வலிக்குது அம்மா? "
" அந்த கால் இன்னும் இருப்பதுபோல் அங்கேதான் வலிக்குது. நான்
உண்மையை சொன்னால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்." என்று கூறியவாறு
அவரைக் கூட்டி வந்துள்ள மகளைப் பார்த்தார்.
" சரியம்மா. நீங்கள் சொல்வது எனக்குப் புரியுது. இதை சரி
செய்துவிடலாம் கவலை வேண்டாம்." அவருக்கு ஆறுதல் கூறினேன்.
என் அருகே நின்ற கமலா ஒன்றும் புரியாமல் என்னைப் பார்த்து
விழித்தாள். அதில் லேசான குறும்பு சிரிப்பும் இழையோடியது.
நான் கமலாவுடன் என் அறைக்கு திரும்பினேன்.
" என்னங்க டாக்டர் இது? இல்லாத கால் இன்னும் வலிக்குது
என்கிறாரே? " கமலாவின் குழப்பம் இன்னும் தீரவில்லை.
" அவர் கூறுவது உண்மைதான் கமலா.இதை கற்பனை கால் வலி என்று
கூறலாம்.அவருடைய கால் துண்டிக்கபட்டபோது நரம்புகள் மூளைக்கு தவறான செய்தி
அனுப்பி அந்த கால் இன்னும் இருப்பதாகவே உணர்த்தியதால், அதுவே உண்மை என்று
மூளை நம்பி வலி உணர்வை இன்னும் தந்து கொண்டிருகிறது. " நான்
விளக்கினேன்.
இது கேட்டு வியந்துபோன கமலா, " இதை எப்படி குணப்படுத்துவது
டாக்டர்? " எனக் கேட்டாள்.
" வேறு வழியில்லை. வலி குறைக்கும் மாத்திரைகள் தரலாம்.
அத்துடன் துண்டிக்கப்பட்டுள்ள பகுதியின் நரம்புகளுக்கு மசாஜ் போன்ற
பயிற்சியும் தரலாம். மருத்துவக் கலையில் இதுபோன்ற வினோதமான நிகழ்வுகளும்
இருக்கவே செய்கின்றன!"
நான் சொன்னதைப் புரிந்துகொன்டவள்போல் தலையை ஆட்டினாள் கமலா.

Reply
Forward

சிறுகதை  ...              மன்னிப்பு      

மார்கழி குளிர் என்பார்களே, அதுபோன்ற குளிர்தான் அன்று இரவும். டிசம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை.. இரவு சுமார் பத்து இருக்கும். வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவு.

கிளினிக் மூடும் நேரம். சாந்தா கணக்கை முடித்துவிட்டு சாமான்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். நான் சற்று நேரம் வெளியேறி வராந்தாவில் நின்றுகொண்டிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு வந்ததிலிருந்து எவ்வளவு நேரந்தான் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருப்பது. அப்படி அமர்வதும் தவறுதான். மூல வியாதியை அது உண்டுபண்ணிவிடும். அதற்கு இப்படி அவ்வப்போது எழுந்து நடப்பது நல்லது. அப்போது அகமட் கழிவறை சென்றான். அவன் இரவு காவலன்.அந்த தேசா செமேர்லாங் பகுதியில் திருட்டுகள் அதிகம்.

இப்படித்தான் ஒருமுறை இரவில் நின்றபோது எதிர்வரிசையில் இருந்த கைத்தொலைப்பேசி கடைமுன் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து முகமூடி அணிந்த நால்வர் கைகளில் நீண்ட இரும்புக் கம்பிகளுடன் திடு திடு என அந்த கடைக்குள் புகுந்தனர். இருவர் வெளியே காவல் காக்க மற்ற இருவரும் கண்ணாடிப் பெட்டிகளை இரும்பால் அடித்து நொறுக்கி அதனுள் இருந்த அத்தனைக் கைப்பேசிகளையும் அள்ளி ஒரு பையில் போட்டுக்கொண்டு உடன் வெளியேறி காரில் பறந்து சென்றுவிட்டனர். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறியது. அதன் பிறகுதான் நான்கூட அகமட்டை நியமனம் செய்துகொண்டேன்.

கிளினிக்கை ஒட்டியபடி ஒரு சந்து . அங்கிருந்து ஒரு தமிழ் இளைஞன் வெளியேறினான். கருத்த மேனியும் கலைந்த கேசமும் குரூரப் பார்வைகொண்டனாகத் தோன்றினான். அக்கம் பக்கம் யாரும் இல்லாத காரணத்தால் மனதில் ஒருவிதமான பயம் எழவே செய்தது.

அங்கு அகமட் இருந்திருந்தால் அந்த பயம் நிச்சயமாக எழுந்திருக்காது. அவன் இராணுவத்தில் இருந்தவன். மிகவும் துணிச்சல்காரன்.

அந்த இக்கட்டான நேரத்தில் என் கைப்பேசி ஒலித்தது. அதை கால்சட்டைப் பையில் இருந்து எடுத்து காதில் வைத்தபோது அவன் என்னை நெருங்கிவிட்டான். என் மனைவிதான் அப்போது பேசினாள்.

திரும்பும்போது மறக்காமல் ரொட்டியும் முட்டையும் வாங்கிவரச் சொன்னால். நான் சரி என்று சொல்லிவிட்டு கைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தேன்.

என்னை நெருங்கி வந்தவன், " சார். கொஞ்சம் போன் பின்ஞ்சாம் தர முடியுமா? என்னுடையதில் கிரெடிட் முடிஞ்சிபோச்சி.அவரசரமாக வீட்டுக்கு போன் பேசணும் ", என்றான்.

நான் எச்சரிக்கையானேன். கொடுப்பது ஆபத்து என்பது எனக்கு தெரிந்தது.

" பின் வரிசையில்தானே செவென் இலவன் உள்ளது? அங்கிருந்துதானே வருவதுபோல் தெரிகிறது? அங்கு டாப் அப் செய்திருக்கலாமே? " இவ்வாறு கூறியவாறு அவனை நோக்கினேன்.

அவன் ஒரு நிமிடம் மௌனம் சாதித்தான்.

சற்றும் எதிர்ப்பார்க்காதவகையில், " குடுக்க மாட்டாயா? " என்ற சத்தத்துடன் என் கையில் வைத்திருந்த கைப்பேசியை வெடுக்கெனெ பிடுங்க முயன்றான். இறுக அதைப் பற்றிருந்த என் கையை அவனும் இறுகப் பற்றினான். நான் ஒரு கணம் நிலைதடுமாறிப்போனேன். சட்டென்று அவனை அப்படியே பின்னால் தள்ளி உதைத்தேன். இப்போது அவன் நிலைதடுமாறினான்! வேகமாக எழுந்தவன் ஓட்டம் பிடித்தான்.

சத்தம் கேட்டு அகமட் கழிவறையில் இருந்து வேகமாக ஓடிவந்து அவனைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

வீதியின் வளைவுவரை ஓடியவன் திரும்பி வந்தான். அவன் எங்கோ சந்துக்குள் புகுந்து ஓடிவிட்டதாகச் சொன்னான்.

நான் அறைக்குத் திரும்பி வீடு செல்வதற்கு தயார் ஆனேன்.

ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

" ஒரு அவசர கேஸ் வந்துள்ளது டாக்டர் ! ". கதவைத் திறந்த அகமட் கூறினான்.

" சரி. வரச் சொல் " என்றவாறு இருக்கையில் அமர்ந்தேன்.

சீனன் ஒருவன் கைத்தாங்கலாக அவனை அழைத்துவந்தான்.

" என்ன ஆயிற்று? " என்றேன்.

" வேகமாக ஓடிவந்தவன் என் காடியில் அடிபட்டுவிட்டான் ". என்று மலாய் மொழியில் கூறினான்!.
அவன் என்னை அச்சத்துடன் பார்த்து விழித்தான். அவனின் வலது கரம் உடைந்து தொங்கியது.
காதலர் தின சிறப்புக் கட்டுரை
சங்கத் தமிழர்கள் போற்றிய காதல்
டாக்டர் ஜி,ஜான்சன்

காதல் இனிமையானது. தமிழர் வாழ்வில் காதல் இன்றியமையாதது. காதலையும் வீரத்தையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழர்கள்.
இன்று உலகமுழுதும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதன் வரலாறு விநோதமானது. ரோமர்கள் ஐரோப்பாவை ஆண்ட காலத்தில் போர்வீரர்கள் தேவை என்பதால் இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வது தடைசெய்யப்பட்டது. ஆனால் புனித வேலன்டைன் என்ற கத்தோலிக்க சந்நியாசி , இரகசியமாக திருமணங்கள் நடத்தி வைத்ததால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரைக் கண்காணித்தவர் அஷ்டெரியாஸ் என்பவர். நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மகளைக் குணமாக்கினார் வேலேன் டைன். அந்த பெண் மீது அன்புகொண்டார் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்ப்படுமுன், " உனது வேலன்டைனிடமிருந்து " என்று அவளுக்கு எழுதி விடை பெற்றார். இதுவே காதலர் தினமானது.
இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் இக் காதலை நமது முன்னோர்களான சங்ககாலத் தமிழர்கள் எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களில் காணலாம்.
கி.மு. 300 முதல் கி.பி. 200 வரையிலான காலமே சங்ககாலம். இது சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலம் எனலாம்.
அப்போது எழுதப்பட்ட எட்டுத்தொகை நூல்களில் நற்றினை குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகம் எனும் காதலைக் கூறுபவை. மொத்தத்தில் 1862 அகப்பாடல்கள் உள்ளன.
இப்பாடல்களில் சில அற்புதமான நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளன.
அன்றைய தமிழகம் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் பாலை என்று ஐந்து வகையான நிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கொப்ப காதல் பாடல்களும் ஐந்து வகையான உரிபபோருள்கள் கொண்டுள்ளன.
அவை வருமாறு:
குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை - ஆற்றிருத்தல் நிமித்தம்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
பெரும்பாலான பாடல்களில் தலைவன்,தலைவி, தோழி, நற்றாய் , செவிலித்தாய் ஆகிய கதை மாந்தர்கள் இருப்பார்கள்.

இவர்களின் தலைவன் தலைவியின் காதல் இருவகையான தன்மைகள் உடையன:
களவொழுக்கம் - தலைவனும் தலைவியும் மணம் நிகழ்வதன் முன்னர்க் கூடுதல்.
கற்பொழுக்கம் - தலைவனும் தலைவியும் மணம் கொண்ட பின்னர்க் கூடுதல்.
இவ்வாறு நாம் இன்று வியப்புறும் வகையில் அன்றைய தமிழர் காதலுக்கு அழகான இலக்கணம் வகுத்து இலக்கிய காதல் புரிந்துள்ளனர்.
அந்த காதல் பாடல்களின் இன்பத்தில் சற்றே லயிப்போம் வாருங்கள்!
கற்பவர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளச் செய்யும் இயல்புடையது குறுந்தொகை .தொட்ட இடமெல்லாம் மணக்கும் சந்தனம்போல், குறுந்தொகையின் எந்தப் பாடலும் பாடலின் எந்த வரியும் நினைக்க இனிக்கும் தன்மையுடையது.
இதோ குறுந்தொகையின் முதல் பாடல். இதை எழுதியப் புலவரின் பெயர் இறையனார்.
" கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழியோ
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே. "
இத்தகைய புலமை நிறைந்த தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இப் பாடலின் அர்த்தம் இதுதான்: " ஆகா! உனது கூந்தலின் அழகை என்ன என்று சொல்வேன்! அதன் மணத்தை என் என்பேன்! ஏ ! வண்டே! நீயே சொல். எனக்காகச் சொல்லாதே, மலர்கள் தோறும் சென்று சென்று ஆராயும் தன்மை உனக்கு உண்டே! அதனால் கேட்கிறேன். சொல்; எனது காதலி இருக்கிறாளே! மயில் போன்ற சாயலாள் ! முல்லை முறுவல் அழகி! இவளது கூந்தல் போல நறுமணங் கமழும் மலர் ஏதேனும் உண்டோ ? சொல்லு. "
பேராசிரியர் துரை.தண்டபாணியின் இந்த விளக்கத்தைப் படித்ததும் திருவிளையாடல் திரைப்படத்தில் சிவனும் நக்கீரரும் வாதிட்டது நினைவுக்கு வருகிறதா?
குறுந்தொகையின் மற்றொரு பாடல் உலகப் பிரசிதிப்பெற்று விளங்குவதாகும். இப்பாடல் லண்டன் மாநகரின் மெட்ரோ இரயில் வண்டிகளில் பொறிக்கப்பட்டுள்ள பெருமை கொண்டுள்ளது.
" யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர் ?
" யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ".
தன் காதல் மீது சந்தேகம் கொண்ட காதலியிடம் இவ்வாறு தலைவன் மொழிகின்றான் . " கண்ணே! என் தாய் யார்? உன் தாய் யார்? ஏதாவது உறவு உண்டா? என் தந்தை யார்? உன் தந்தை யார்? இவ்விருவருக்கும் முன் பின் ஏதாவது உறவு உண்டா? நீ யார்? நான் யார்? நம் இருவருக்கும் ஏதாவது பழக்கமுண்டா? அவ்விதமிருக்க நம் இருவர் உள்ளமும் ஒன்றாயின பார்த்தாயா? நம்மிடையே காதல் தோன்றியது பார்த்தாயா? செம்மண் நிலத்தில் மழைப் பெய்தால் என்னவாகும்? நீரும் செம்மண்ணும் பிரிக்க முடியாத ஒன்றாகும். நம் காதலும் அப்படித்தான் . எனவே பிரிதல் என்பது இல்லை.அஞ்சாதே, கவலை வேண்டாம் கண்ணே! " இதை எழுதியப் புலவரின் பெயர் தெரியாதலால் அவருக்கு செம்புலப் பெய்னீரார் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.
இதுபோன்று குறுந்தொகையில் 400 பாடல்கள் அக்காலக் காதலை சிறப்பு செய்துள்ளன.
அடுத்த நூலான நற்றிணையிலும் 400 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் வாழ்க்கையிலும் காதல் நெறியிலும் ஒழுக்க நெறியைச் சாற்றும் தன்மையன.
நற்றிணையின் முதல் பாடலைப் பாடியவர் கபிலர். குறிஞ்சித் திணையில் பாடப்பட்டுள்ள இப்பாடல் வருமாறு:
" நின்ற சொல்லர் நீடு தோறு இனியர்
என்றும் என்தோள் பிரிபு அறியலரே ,
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை.
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந் தரளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உருபவோ செல்பறியலரே .
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வானோ என பயந்த தோழி அதை தலைவியிடம் கூறியபோது, தலைவி அவளுக்கு கூறும் பதிலாக இதை எழுதயுள்ளார் கபிலர்.
" தோழி! என் தலைவர் எப்போதும் நிலைபெற்று விளங்கும் சொற்களை உரைப்பவர்.எல்லாக் காலத்திலும் இனிமை திகழ விளங்குபவர். எத்தன்மையினும் என்னைப் பிரியாதவர். தாமரை மலரில் உள்ள குளிர்ந்த மகரந்தத் தாதுக்களை நுகர்ந்து சந்தன மரத்தில் சேர்க்கும் தேன் கூடு போன்று அவருடைய பழக்கமானது இனிமையும் நறுமணமும் கொண்டு விளங்கும். நீர் இன்றி உலகம் இல்லாதது போன்று நம்மையன்றி வேறு எதுவும் காணாதவராகத் தலைவர் விளங்குபவர் . அவர் என்னுடைய நெற்றி பசலை கொண்டு வருந்துமாறு பிரிந்து செல்லுதற்கு அறியாதவர் . "
இதுபோன்று நற்றிணைப் பாடல்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அகநானூறு பாடல்களும் 400 உள்ளன. அவையனைத்தும் காதல் வரிகள்தான்!
எல்லாவற்றுக்கும் மேலாக நம் வள்ளுவப் பெருந்தகையும்கூட காதலில் தமது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
காமதுப்பாலின் 1101 வது பாடலின் ஈரடியில் எல்லாவற்றையும் கூறி முடித்துவிட்டார்!
" கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உலா.
" கண்ணால் கண்டும், செவியால் கேட்டும், நாவால் உண்டும் ,மூக்கால் மோந்தும் ,மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும் ஒளிபொருந்திய வலையல்களையுடைய இப் பெண்ணினிடத்தே இருக்கின்றன ." என்று காதலி தரும் காதல் இன்பத்தைக் கூறுகின்றார் வள்ளுவர்!
காதல் பற்றிய அகப்பாடல்கள் அனைத்தும் கூற இப்பகுதி போதாது. காதல் குறித்து அவ்வளவு எழுதியுள்ளனர் நம் முன்னோர்கள் . இத்தகைய இனிய காதலை நாம் என்றும் போற்றி வளர்ப்போம் வாருங்கள்!
Reply
Forward
Dr.G.Johnson Johnson <drgjohnsonn@gmail.com>
An Unusual Encounter
by
Dr.G.Johnson
A Chinese lady and her daughter entered my consultation
room. She was about thirty years old. Her daughter was a school girl
aged ten.
As soon as they were seated, I asked what was the problem
with her daughter. " You examine her first and tell me her problem! "
she ordered. I was taken aback by her retort.
" Madam, I will definitely examine your daughter.But before
that if you could tell me her complaints, it would be beneficial for
both of us.I am sorry to see you in an angry mood. " I explained.
" Yes doctor! I am angry with you! You know what happened
here during my last visit to your clinic? " she asked.
" What happened madam? " I asked.
" You were not here. There was another Malay doctor. My
daughter had cough and running nose. Your doctor has given her steroid
medicine! I checked with another doctor and he told me that it is
steroid. I searched the Internet and read that steroid can affect the
kidneys. Luckily I did not give her that steroid! " she blurted out in
anger.
I checked the child's records and realised that she had
wheeze on that day and therefore my doctor had prescribed syrup
Prednisolone.
" Madam, my doctor has done the right thing. She had
wheezing on that day. He has given it as a precautionary measure
against asthma. "
" But my daughter never had asthma."
" Giving steroids for a short time has no side effects on
the kidneys. Nowadays it has become a common practice to use steroids
in this manner for quick relief of inflammation and swelling anywhere
in the body.There is no harm in it. "
She was not convinced.
" No doctor. I read it in the Internet. I was so upset about
it. " she was not satisfied.
" Anyway, as you have not given the medication, you need not
worry any further...now what is the matter with your daughter?"
" The same problem doctor. But now she also has fever.". She
seemed to be a bit calm now.
After examining the girl I was writing the prescription. She
was watching me with eyes wide open.
" What medicines doctor? " she enquired.
I explained to her about each medicine.
" Sure there are no steroids? " she was still a bit suspicious.
" No madam, no steroids,"
I pressed the calling bell for the next patient. They left
the room and I was busy with the other patients.
Half an hour elapsed. Suddenly there was a turmoil outside.I
heard screaming and shouting.
Before I could realise what was the matter the same Chinese
lady rushed into the room without knocking.Her daughter followed
her.The lady had a furious look. The girl was sobbing. Her face was
swollen and her eyes were cherry red!
I knew what was her problem in an instant. She had an
allergic reaction for Amoxycillin, the antibiotic.
" Look! What happened to my daughter, doctor! " she shouted at me.
" Calm down madam. It is an allergy to antibiotic. Nothing
to worry. She will be alright in ten minutes after an injection. " I
assured her.
" Do anything doctor! I am anxious about her!." she pleaded.
There was no more anger on her face.
As I was preparing to give the injection, she enquired in a
trembling voice, " What injection doctor? "
I turned to her boldly saying, " What else? The same steroid
which you objected! "
She stood dumbfounded!
 
சிறுகதை தாய்மை
டாக்டர் ஜி. ஜான்சன்
கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் ஒரு சந்தின் வழியாகப் புகுந்தால் பிரதான வீதியொன்று தெரியும். அதைத் தாண்டி சென்றால் எதிரேயுள்ள கடைகள் வரிசையில் கிளினிக் புத்திரி உள்ளது. நான் அதில்தான் தற்போது பணியாற்றுகிறேன்.
மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த கிளினிக்கில் மலாய்க்காரர்களே அதிகம் வருவதுண்டு. இந்தப்பகுதியில் ஏராளமான பெல்டா ( FELDA ) தோட்டங்கள் இருப்பதால் அவர்களின் ஜனத்தொகையே அதிகம். எப்போதாவதுதான் தமிழர்கள் வருவர். சீனர்கள் வருவது மிகக் குறைவுதான்.
நான் பெர்மாஸ் ஜெயாவிலிருந்து காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளினிக் வந்துவிடுவேன். இரவு பத்துவரை வேலை.
எனது மருத்துவப் பணியில் எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றாடம் நான் காணும் ஒவ்வொரு நோயாளியிடமும் கதைகளுக்கு ஒரு கரு கிடைக்கும். அதுபோல் இந்த கதையும் ஒரு கரு பற்றியதுதான்.
கரு எப்படி உருவாகிறது என்பதே ஆச்சரியம் நிறைந்ததே. அதற்கு ஒரு பெண்ணின் ஒரேயொரு சினைமுட்டையும் ஒரு ஆணின் உயிர் அணுவும் (sperm ) ஒன்று சேர வேண்டும். அது சேர்ந்து கருவாக உருவாவதற்கு மாதத்தில் ஒரு வாரமே உகந்த நேரம். வேறு நாட்களில் ஆண் பெண் ஒன்று சேர்ந்தாலும் கரு உட்பத்தியாகாது. இந்த ஒரு கரு உற்பத்திக்காக எத்தனை தம்பதினர் எத்தனை எத்தனைக் காலம் கண்ணீரும் கவலையுடனும் என்னைக் காண வந்துள்ளனர் என்பதை நானறிவேன்.
ஆனால் ஒரு சிறுகதைக்கான கருவோ எந்நேரமும் வெகு எளிதில் உருவாகிவிடும். இதுவே படைப்பாளிகளின் தனிச் சிறப்பு எனலாம்.
வழக்கம் போல் அன்றும் நோயாளிகளைப் பார்த்துகொண்டிருந்தேன். திங்கட்கிழமை என்பதால் எப்போதுமே கூட்டம் அதிகம்தான். வாரஇறுதி ( weekend ) நோய் என்று ஒன்று உள்ளது. அதனால் பலர் திங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் என்னைப் பார்க்க வந்து விடுவர். அவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு, ஒற்றைத்தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, இடுப்பு வலி, கைகால் குடைச்சல் பரவலாக காணப்படும். நானும் அவர்களின் நோக்கம் தெரிந்தவனாக மருத்துவ விடுப்பு ( MC ) தந்துவிடுவேன்.
என் எதிரே அமர்ந்திருந்த மலாய்ப் பெண்ணை நான் பார்த்தேன். லீசா எனும் பெயர் கொண்ட அவளுக்கு வயது 25. மணமானவள். AB Tech நிறுவனத்தில் வேலை செய்பவள்.
" டாக்டர்...நீங்கள் முன்பு தெசா செமேர்லாங் மில்லினியம் கிளினிக்கில் வேலை செய்தீர்கள் இல்லையா? நான் உங்களை அங்கே பார்த்துள்ளேன். " மலாய் மொழியில் கூறி என்னைத் தெரிந்துள்ளதாக காட்டிக்கொண்டாள்.
' ஆமாம் " என்றேன்.
" டாக்டர். நான் இன்று வேலைக்கு போகலை. நேற்றிலிருந்து வாந்தியும். மயக்கமாகவும் உள்ளது. வயிறு வலிக்குது. " சோர்வாகவே அவள் காணப்பட்டால்.
" வையிற்றுபோக்கு உள்ளதா ? " என்றவாறு அவளைப் பார்த்தேன்.
" இல்லைங்க டாக்டர்." இது அவளின் பதில்.
அவளை சாதாரண பரிசோதைகள் செய்துவிட்டு, ' ஒரு வேலை நீ கருவுற்றிருக்கலாம். எப்போது கடைசி மாதவிலக்கு என்று கேட்டேன்.

' டிசம்பர் மாதம் பத்தாம் தேதி டாக்டர். ஆனால் இருக்காது டாக்டர். எப்போதும் இப்படிதான். " நம்பிக்கையற்றவளாகக் கூறினாள்
' திருமணம் ? "
' உம்.... "
"பிள்ளைகள் ?"
' இல்லை "
" மணமாகி எத்தனை வருடங்கள்? "
" ஆறு வருஷம் ".
" ஒரு முறைகூட கரு தரிக்கவில்லையா? "
' இல்லைங்க டாக்டர்..அதனால்தான் எனக்கு நம்பிக்கை இல்லை." உறுதியாகச் சொன்னாள்.
" எனக்கு என்னவோ இது கற்பம்போல் தோன்றுது. எதற்கும் சிறுநீர் பரிசோதித்து பார்த்துவிடுவோம். " முடிவாகக் கூறினேன்.
அவள் வேண்டாவெறுப்பாகவே தலையாட்டினாள். அதற்குக் காரணம் அந்த பரிசோதனை செய்ய அவள் முப்பது வெள்ளி கட்டியாகவேண்டும்.
அது urine pregnancy test எனும் பரிசோதனை. அதில் மூன்று சொட்டு சிறுநீர் இட்டால் மறு வினாடியில் இரண்டு கோடுகள் தெரிந்தால் கற்பம் என்பது உறுதி.
அதை செய்து முடித்த கிளினிக் பெண் ஜோதி வாழ்த்துக்கள் என்று ஆங்கிலத்தில் கூறியவாறே அறைக்குள் நுழைந்தாள்.
நான் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் இருந்தன!
" நீ கர்ப்பமாக உள்ளாய். வாழ்த்துக்கள் ." அவளைப்பார்த்துக் கூறினேன்.
அவளால் அதை நம்பமுடியவில்லை. அவளின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. முன்பே ஆரஞ்சு நிறத்தில் இருந்த அவளின் முகம் பூரிப்பில் சிவந்த ரோஜாவானது!நான் அந்த பரிசோதனை சாதனத்தை அவளிடம் காட்டினேன். அதில் இரண்டு கோடுகள் உள்ளதை அவள் உற்றுப் பார்த்தபின்புதான் நம்பினாள்
மறு நிமிடம் அப்படியே என் கைகள் இரண்டையும் பூரிப்புடன் பற்றிக்கொண்ட அவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது!
" ரொம்ப நன்றி டாக்டர்! ரொம்ப நன்றி டாக்டர்! என்னால் இதை நம்பவே முடியலை! " உரக்கவே கத்திவிட்டாள்.
உடன் கைத்தொலைப்பேசியை எடுத்து கணவனை அழைத்து அந்த நல்ல செய்தியைக் கூறினாள்
தாய்மை அடைவது தருகின்ற பேரானந்தத்தை அன்று அவளிடம் நேரில் கண்டு வியந்தேன்.
இந்த ஒரு கரு உண்டாக அவள் ஐந்து வருடங்களாக முயன்று ஒவ்வொரு மாதமும் ஏமாந்தது போன நிலையில் .இனி வாய்ப்பே இல்லை என்ற நிலையில்தான் அவள் என்னிடம் வந்துள்ளாள்.
ஈன்ற போழுதிட் பெரிதுவக்கும் என்று வள்ளுவர் சொன்னபோது குழந்தையை ஈன்றேடுப்பது பெரிய இன்பம் பெண்ணுக்கு என்றார். ஆனால் கருவுறுவது அதைவிட பேரின்பம் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்! ( முடிந்தது )




Reply
Forward
Dr.G.Johnson Johnson <drgjohnsonn@gmail.com>
5:29 PM (23 hours ago)
to vani
அன்புள்ள நண்பர்களே, பைபிள் என்ற கிறிஸ்துவ வேதாகமம் பலமுறை திரும்பத்திரும்ப படித்துள்ள நான் அதை புதிய தமிழில் எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. அதன் முயற்சியே இது. நேரம் கிடைத்தால் நீங்களும் படித்துப் பாருங்களேன்?

ஆதியாகமம்

1 அத்தியாயம்

1. துவக்கத்திலே கடவுள் விண்வெளியையும் உலகையும் படைத்தார்....

2. உலகம் ஒழுங்கு இல்லாமல் வெறுமையாக இருந்தது. அதன்மேல் இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் நீரலைகளில் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3. வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் கடவுள். உடனே வெளிச்சம் உண்டானது

4.வெளிச்சம் நல்லது என்று கடவுள் கண்டார்.வெளிச்சத்தையும் இருளையும் அவர் வெவ்வேறாகப் பிரித்தார்

5. வெளிச்சத்தைப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதல் நாள் ஆனது.

6. பின்பு கடவுள் : நீரின் மத்தியில் ஆகாயவிரிவை உண்டுபண்ணி அது நீரை பிரிக்கக்கடவது .என்றார்.

7. கடவுள் அந்த ஆகாயவிரிவுக்கு மேலேயும் கீழேயும் உள்ள நீருக்குள் பிளவை உண்டுபண்ணினார்.

8. ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார். மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆனது..

9. பின்பு கடவுள், வானத்தின் கீழேயுள்ள நீர் ஓரிடத்தில் சேரவும் வேட்டாந்தரை காணப்படக் கடவது என்றார்: அது அப்படியே ஆனது.

10. கடவுள் அந்த வெட்டாந்தரைக்கு பூமி என்றும் ஒன்று சேர்ந்த நீருக்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். ( தொடரும் )
 
ஆதியாகமம்

1 அத்தியாயம்

11. அப்பொழுது கடவுள் : நிலமானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும்,நிலத்தின்மேல் விதைகளைக் தரக்கூடிய பலதரப்பட்ட கனிமரங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்.: அது அப்படியே ஆயிற்று.

12. நிலம் புல்லையும், தங்கள் தங்கள் இனத்தின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் இனத்தின்படியே விதைகளையுடைய கனிகளைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது.: கடவ...ுள் அது நல்லது என்று கண்டார்.

13. மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

14. பின்பு கடவுள்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது , அவை அடையாளங்களாகவும், காலங்களையும், நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்..

15. அவைகள் உலகின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று .

16. கடவுள், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் , விண்மீன்களையும் உண்டாக்கினார்.

17. அவைகள் உலகின்மீது ஒளிவீசவும்,

18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், கடவுள் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; கடவுள் அது நல்லது என்று கண்டார்.

19. மாலையும் காலையுமாகி நாலாம் நாள் .ஆயிற்று.

20. பின்பு கடவுள்: நீந்தும் உயிர்வகைகளையும், வானில் பறக்கும் பறவைகளையும், நீரிலும் வானிலும் பெருகக்கடவது என்றார்.

( தொடரும் )