Thursday 8 November 2012

தமிழரின் பரிதாபம்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற பாடல் வரிகளை நாம் நன்றாகவே அறிவோம். ஆனால் இது இன்றைய தமிழர்களுக்கு பொருந்துமா?

நமக்குள்தான் எத்தனை எத்தனைப் பிரிவுகள்!

முதலில் நம்மைப் பிரித்தது ஜாதி! அன்று அனைவருமே இந்து மத தெய்வங்களையே வழிபட்டோம். ஆனால் இந்துக்களிடையே இந்த ஜாதி வெறி பிடித்து ஆடியது. அதோடு வேறுபடுத்தியும் காட்டியது. தமிழர்கள் அனைவரும் ஓர் இனம் என்றாலும் அவர்கள் ஜாதி அடிப்படையில் மாறுபட்டவர்கள் என்பதை உணர்த்தியதோடு தமிழனைத் தமிழனே வெறுத்தும், ஒதுக்கியும் வைத்து வாழும் நிலை உண்டானது. இந்து மதத்தை இங்கு கொண்டு வந்தவர்கள் இந்த ஜாதிப் பிரிவினையில் தீவிரம் காட்டி தமிழர்களை பிரித்து வைத்தனர்.முட்டாள் தனமான இந்த ஜாதிப் பிரிவினையை அப்பாவித்தனமாக மக்கள் நம்பி வாழ்ந்தனர்.

" ஜாதி இரண்டொழிய வேறில்லை " என்று அவ்வை மூதாட்டி பாடியது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

அதன் பின்பு முகலாயர் படையெடுப்பு. பலர் இந்து மதத்தை விட்டு விலகி இஸ்லாமியர் ஆயினர். அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சி. ஜாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெற பலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.

வேறு சிலரோ எந்த மதமும் வேண்டாம் என்று கடவுளே இல்லை என்று கூறி நாத்திகர் ஆயினர்.

சென்ற நூற்றாண்டில் " சாதிகள் இல்லையடி பாப்பா " என்று பாரதி பாடியதும் கேலிக் கூத்தானது!

ஆகவே ஒன்றாக இருக்க வேண்டிய தமிழர்கள் இன்று ஜாதியாலும் மதத்தாலும் பிளவு பட்டு பரிதாபமாக வாழ்ந்து வருகின்றனர்.

" நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைக்கெட்ட ( தமிழ் ) மனிதரை நினைத்துவிட்டால்! "...டாக்டர் ஜி. ஜான்சன்.


No comments:

Post a Comment